உலகாளுந்தேவி

உலகாளுந் தேவி, உலகுசெய்யும் நாயகி,
புலவர்கள் போற்றப் பூஞ்சிரிப்பை நல்குவார்,
கலக்கங்கள் தீர்த்துக் கவின்வளங்கள் பெருக்குவார்,
வலம்வந்து தொழுவோம், வல்லமைகள் பெறுவோம்.

பலவுயிரும் இங்கு பாங்காக வாழும்,
குலங்காக்கும் உத்தமி, கொடியிடையார் என்னும்,
நிலம்,வானம், கதிரவன், நிலா,விண்மீன் யாவும்
விலங்கல்கோன் மகளை வியந்தேத்திப் போற்றும்.

எம்செயல்கள் என்னும் இழிசெருக்கை விலக்கி,
அம்பிகையின் ஆணை, அவைசெய்வோம் என்று
நம்பிக்கை கொண்டு நடக்கிறவர் வெல்வார்,
கும்பிட்ட பேர்கள் குவலயத்தை ஆள்வார்.

வம்மின்கள், அழகி, வளைக்கரத்தார், மலைமகள்
அம்புயத்தை நிகர்க்கும் அடிதொழுவோம், பகைவர்
மும்மதில்கள் எரித்த முதல்வரவர் தலைவி,
அம்மாவென்(று) ஏத்தி அருள்மழையில் நனைவோம்.

Leave a comment