எண்ணெழுத்து வரங்கள் இவ்வுலகுக்(கு) அருள்வார்,
வெண்கமலத்(து) அமர்வார், வீணையிசை பொழிவார்,
எண்ணத்தில் தூய்மை இருக்கின்ற பேர்க்குப்
பண்ணிசைத்துப் பாடும் பண்பருளிச் சிரிப்பார்.
வண்ணமலர் சூடி வையகத்தில் அறிவைப்
பெண்ணரசி பரப்பப் பேரின்பம் நிலைக்கும்,
விண்ணோர்கள், மாந்தர் வேண்டிடுவார், அருளாங்
கண்ணோட்டம் மிகுந்தார் கவின்தாள்கள் பணிவார்.
பொன்மணிகள் மட்டும் பொருட்டென்று எண்ணும்
நன்மையிலா வாழ்க்கை நாயகியால் மாறும்,
மன்னுலகில் எவர்க்கும் மதியென்னும் வரத்தை
அன்போடு வழங்கும் அறிவுமகள் சித்தம்.
அன்னத்தை நிகர்க்கும் அழகுநடைத் தேவி,
சொன்மாலை கோத்துச் சூட்டுவிப்பார், சூடுவார்,
பன்மலர்கள் தூவிப் பனிமொழியை வணங்கும்
கன்மனத்தர் கூடக் கவிவாணர் ஆவார்.